ஜிம்பாப்வே கேப்டனை சூதாட்டத்திற்கு அழைத்த கிரிக்கெட் சங்க நிர்வாகி.. 20 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி
சூதாட்ட புகாரில் ஜிம்பாப்வேவை சேர்ந்த கிரிக்கெட் அசோஸியேஷன் நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஹராரே: சூதாட்ட புகாரில் ஜிம்பாப்வேவை சேர்ந்த கிரிக்கெட் அசோஸியேஷன் நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயின் ஹராரே மாநகரின் கிரிக்கெட் அசோஸியேஷனில் பொருளாளர் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநராக இருப்பவர் ராஜன் நாயர். இவர் மீது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமரை சூதாட்டத்திற்கு அழைத்தது உள்ளிட்ட 3 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமர் ஐசிசியில் ராஜன் நாயர் தன்னை சூதாட்டத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக புகார் அளித்தார். ராஜன் நாயரும் இந்த புகாரை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நாயர் மீது நேரடியாக நாடுதல், தூண்டுதல், ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட நாயருக்கு 20 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கேப்டன் கிரிமர், விளையாட்டுக்கு நெருக்கமான ஒருவர் தன்னை சூதாட்டத்துக்காக நாடியதாகவும், இதுகுறித்து உடனடியாக தான் புகார் அளிக்க வேண்டும் என தான் முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். விளையாட்டிலிருந்து ஊழலை வெளியேற்ற நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றும் ஜிம்பாப்வே கேப்டன் கிரிமர் தெரிவித்துள்ளார்.