கிளிக் கெமிஸ்ட்ரி.. வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு.. 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
ஸ்டாக் ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இவர்கள் கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக இந்த பரிசை வென்றுள்ளனர்.
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசுகள் கருதப்படுகிறது. நோபல் பரிசை வென்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பணம், மற்றும் பதக்கமும் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்படும். நோபல் பரிசுகள் ஆண்டு தோறும் குறிப்பிட்ட துறைகளில் சிறப்பாக செயல்படும் தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படும்.
வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுகள் அளிக்கப்படுகிறது.
2022ம் ஆண்டின் நோபல் பரிசுகள் அனைத்தும் அக்டோபர் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு வருகின்றது. அக்டோபர் 3ம் தேதி அன்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசை ஸ்வான்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்விற்காக வென்றுள்ளார்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
இதேபோல், அக்டோபர் 4ம் தேதியான நேற்று இயற்பியல் துறைக்காக பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகிய மூவர் வென்றுள்ளனர். ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் பெரிய தூரத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்பதற்கான வழியைக் கண்டறிந்ததற்காக மூவருக்கும் இவ்விருது அளிக்கப்பட இருக்கிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி,டென்மார்க்கின் மார்டென் மெல்டாலிற்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக இந்த பரிசை வென்றுள்ளனர்.