சீனாவில் விபத்துக்குள்ளான இழுவைப் படகு – இந்தியர் உட்பட 22 பேரைத் தேடும் பணி தீவிரம்
பீஜிங்: சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்க்ட்ஸே ஆற்றில் இன்று ஒரு இழுவைப் படகு மூழ்கியதில் 25 பேர் ஆற்றில் மூழ்கினர்.
அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒரு இந்தியர் உள்பட 22 பேரை தேடும் பணியில் 30 க்கும் மேற்பட்ட மீட்பு படகுகள் மற்றும் ரோந்து படகுகள் ஈடுபட்டு வருகின்றன.
மூழ்கிய படகை கிரேன் மூலம் தண்ணீரில் இருந்து தூக்கி நிலைநாட்டும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெரிய சரக்கு கப்பல்களை துறைமுகத்தின் நடைமேடைக்கு கொண்டு சேர்க்கும் இந்த இழுவைப் படகின் இழுவை சக்தி தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆற்றில் வைத்து பரிசோதித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்தப் படகு பக்கவாட்டில் கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கிவிட்டதாக மீட்கப்பட்ட மூவரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
30 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் படகு 368 டன் எடை கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தண்ணீரில் மூழ்கிய 21 பேரும் இறந்து விட்டதாகவும், ஒருவரை மட்டும் கண்டறிய முடியவில்லை என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன.