துருக்கி.. 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வு.. சுனாமியும் தாக்கியது.. பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் நேற்று இரவு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவாகியது. கிரேக்க நகரமான கார்லோவாசி சமோஸில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
196 நில அதிர்வு
22 பேர் பலியானதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளதாம். எனவே மக்கள் பயந்து போயுள்ளனர்.
10 நிமிடங்கள்
32 வயதாகும், கோகான் கான் என்பவர் நிருபர்களிடம் கூறுகையில், இப்போது எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன். நிலநடுக்கத்தை 10 நிமிடங்கள் உணரமுடிந்தது. மறுபடியும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது. எனக்காக மட்டுமல்ல, எனது மனைவி மற்றும் 4 வயது மகன் ஆகியோரை நினைத்து நான் பயந்து போனேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
My heart goes out to our brothers and sisters in #Izmir #Turkey . May Allah give them strength Ameen 🙏 #TurkeyEarthquake pic.twitter.com/XQiylHI78K
— Asim Jofa (@asimjofa) October 30, 2020
கடல் தண்ணீர்
சமூக ஊடகங்களில் காணப்படும் புகைப்படங்களில், கடல் கொந்தளிப்பால் இஸ்மிர் அருகே உள்ள ஒரு நகரத்தின் தெருக்களில் தண்ணீர் ஓடுவது தெரிகிறது.
பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து நகரமே நிலைகுலைந்து போயுள்ளன. மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த மக்களை தேடும் பணி நடைபெற்றது.
கடலில் சுனாமி
சமோஸ் தீவில் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. சமோஸில், மக்கள் பீதியால் வீதிகளுக்கு விரைந்தனர். "இது குழப்பமாக இருந்தது," என்று துணை மேயர் ஜியோர்கோஸ் டியோனீசியோ கூறினார். "நாங்கள் இதுபோன்ற எதையும் இதற்கு முன்பு பார்த்தது இல்லை" என்று அவர் கூறியுள்ளார். சமோஸ் மக்கள் திறந்த வெளியில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். கட்டிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.