எகிப்து கால்பந்து மைதானத்தில் மோதல் - 22 பேர் பலி : பெற்றோர் கதறல்!!
கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
எகிப்து நாட்டின் கெய்ரோ ஏர் டிஃபன்ஸ் மைதானத்தில் எகிப்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி ஒன்றில் இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் மைதானத்தில் அதிக அளவில் குவிந்தனர்.
கெய்ரோ நகரை சேர்ந்த ஜாம்லாக் மற்றும் என்.பி.பி.பி.ஐ அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் அதைக் காண திரண்ட ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.
மைதானத்தில் உள்ள ஒரே ஒரு கேட் மட்டுமே திறக்கப்பட்டு அதன் வழியாக ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். போட்டி தொடங்கி விட்டதால் ரசிகர்கள் அவசரம் அவசரமாக உள்ளே நுழைய முயற்சித்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.
அந்த சமயத்தை பயன்படுத்தி ஜாம்லாக் அணியை சேர்ந்த டிக்கெட் இல்லாத ரசிகர்கள் உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். பாதுகாவலர்கள் அவர்களை தடுத்ததால் அங்கு வன்முறை வெடித்தது.
ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர், மைதானத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட கார்களுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் அங்குமிங்கும் சிதறி ஓடிய ரசிகர்கள் ஒருவர் மீது ஓருவர் விழுந்து காயமடைந்தனர்.
கூட்டத்தினரிடையே கடும் நெரிசலும் ஏற்பட்டது. இதில் சிக்கி சிறுவர்கள் உள்ளிட்ட 22 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பெற்றோர் கதறல்
பலியானவர்களின் உறவினர்கள் கெய்ரோவில் உள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர். இதில் குழந்தையை பறிகொடுத்த தாய் ஒருவர், உயிரிழந்த சிறுவனின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
"கால்பந்து விளையாடுவதையும் பார்ப்பதையும் விட்டு விடு என்று கூறினேனே அதை கேட்காமல் உயிரை விட்டுவிட்டாயே" என்று கண்ணீர் விட்டு கதறியது அனைவரின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது
போட்டிகள் ரத்து
வன்முறை, உயிரிழப்பு சம்பவத்தையடுத்து, நேற்று கூடிய எகிப்து அமைச்சரவை, தேசிய லீக் கால்பந்து போட்டியை காலவரையற்று ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தொடரும் வன்முறை
எகிப்து நாட்டில் கால்பந்து போட்டிகளின் போது வன்முறை வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முன் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி போர்ட் சையத் நகரில் நடந்த போட்டியில் அல்அலி மற்றும் அல் மஸ்ரி அணிகள் மோதின. இந்த போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 74 ரசிகர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.