இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 22 ஈழத் தமிழர்கள்.. உதவி கோரி கதறல்!
இந்தோனேசியாவிலிருந்து 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர். நாடு திரும்பினால் தாங்கள் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர்.
ஜகர்த்தா: கடந்தாண்டு இந்தோனேசிய கடலில் தத்தளித்த 44 இலங்கை தமிழ் அகதிகள் பல்வேறு அழுத்தங்களுக்கு பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்பட்டது. தற்பொழுது இந்தோனேசியாவில் உள்ள 44 பேர்களில், ஐந்து அகதிகளுக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளது. 17 அகதிகள் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 22 அகதிகளும் நாடுகடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களுள் ஒருவர் சிவரஞ்சனி. இந்தோனேசியாவில் லோக்சுமேவ் என்ற அகதிகள் மையத்தில் வசித்து வருகிறார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
வலுக்காட்டாய முகாம்
குழந்தை பிறந்த 3 நாட்களில் சிவரஞ்சனி வலுக்கட்டாயமாக முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அவரும் அவரது கணவர் பகிதரம் கந்தசாமியும் தங்கள் சூழ்நிலை குறித்து நியூசிலாந்து ஊடகம் ஒன்றிடம் பேட்டி அளித்துள்ளனர்.
தவறான பதிவு
அப்போது, கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தோனேசிய கடலில் தத்தளித்த அவர்கள் நியூசிலாந்து செல்ல முயற்சித்தாக கூறியுள்ளனர். ஆனால் ஐ.நா அகதிகள் முகமை தங்களைப் பேட்டி எடுத்த பொழுது நாங்கள் ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்ததாக தவறாக பதியப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அகதிகள் படகுகளை ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது என்று தெரிந்திருந்தால் நியூசிலாந்து செல்லவே முயற்சி செய்திருப்போம் என்று கூறியுள்ளனர்.
சிஐடியினரின் சித்ரவதை
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்ததற்காக தாம் எட்டு ஆண்டுகள் இலங்கைச் சிறையில் இருந்ததாகவும், நகங்கள் பிடுங்கப்பட்டு சிஐடியினரால் தொடர்ந்து சித்ரவதைக்கு உள்ளனாதாகவும் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர்.
நடுகடலில் விட்டுவிட்டு..
44 அகதிகளும் இந்திய மதிப்பில் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து வேதாரண்யத்திலிருந்து படகில் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் கரை சேர்ப்பதாக சொன்ன ஆட்கடத்தல்காரர்கள், எரிப்பொருள் தீர்ந்ததும் வேறு படகில் தப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அச்சத்தில் அகதிகள்
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னால் உட்கார, நிற்கக்கூட முடியவில்லை என கலங்கியுள்ளார் சிவரஞ்சனி. கெளரவமான வாழ்க்கையை எதிர்ப்பார்த்துள்ள இந்த அகதிகள், இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவோம் என அஞ்சுகின்றனர்.
புகைப்படம்: கோமாஸ் சிமான்ஜுன்டக், அந்தாரா போட்டோ