காணாமல் போன 23 கிலோ எடை கொண்ட இரிடியம்.. ஆபத்தான கதிரியக்க சாதனம்.. மலேசியாவில் பகீர்
மலேசியாவில் மிக சக்திவாய்ந்த கதிரியக்க சாதனம் ஒன்று காணாமல் போய் உள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவில் மிக சக்திவாய்ந்த கதிரியக்க சாதனம் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதன் எடை 23 கிலோ என்று மலேசியா அரசு பகீர் கிளப்பி உள்ளது.
இந்த சாதனம் முழுக்க முழுக்க இரிடியம் எனப்படும் கதிரியக்க மூலக்கூறு இருப்பதாக மலேசியா கூறியுள்ளது. இந்த சாதனத்தின் பெயர் ''ரேடியோஆக்டிவ் டிஸ்பெர்ஸல் டிவைஸ் (radioactive dispersal device)'' கதிரியக்க பரப்பு சாதனம் என்று தமிழில் மொழி பெயர்க்கலாம்.
இதுதான் இப்போது காணாமல் போய் இருக்கிறது. தற்போது இதுகுறித்து மலேசிய போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
என்ன மாதிரியான சாதனம்
ரேடியோஆக்டிவ் டிஸ்பெர்ஸல் டிவைஸ், மலேசிய அரசுடன் ஒப்பந்தம் முறையில் இயங்கும் நிறுவனம் ஒன்றின் சாதனம் ஆகும். மின்சாரம் தயாரிக்கவும், எரிபொருள் தயாரிக்கவும் இந்த சாதனம் பயன்படுத்தப்படும். இதில் இருக்கும் இரிடியம் வற்றாத கதிரியக்க பொருள் ஆகும். இதை வைத்து அணுகுண்டும் தயாரிக்கலாம்.
இடமாற்றம்
இந்த சாதனத்தை, நேற்று கோலாலம்பூரில் இருந்து சேரேம்பென் நகர் நோக்கி இரவோடு இரவாக இடமாற்றப்பட்டுள்ளது. இரண்டு டிரைவர்கள், இதை பெரிய டிரக்கின் பின்புறம் வைத்து கொண்டு சென்று இருக்கிறார்கள். அவர்கள் சேரேம்பென் நகரில் உள்ள அலுவலகத்திற்கு சோதனைக்காக இதை கொண்டு சென்று இருக்கிறார்கள்.
மாயமானது எப்படி
ஆனால், அலுவலகத்தில் சென்று பார்த்த போது, டிரக்கின் உள் இருந்த கதிரியக்க சாதனம் காணாமல் போய் உள்ளது. எப்படி காணாமல் போனது என்று யாருக்கும் தெரியவில்லை. டிரைவர்களுக்கும் இந்த சாதனம் எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை என்கிறார்கள். அப்படியே மாயமாக மறைந்ததாக கூறுகிறார்கள்.
எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
இதை நல்ல வேலைக்கு பயன்படுத்துவது போலவே, மோசமான வேலைக்கும் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் இரிடியமை தனியாக எடுத்து, சில மாற்றங்கள் செய்து வேறு சில பொருட்களை சேர்த்து அணு ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இது தீவிரவாதிகள் கைக்கு சென்று இருக்கலாமோ என்று அச்சம் எழுப்பியுள்ளனர்.
விசாரணை நடத்தி வருகிறார்கள்
இதுகுறித்து மலேசிய போலீஸ் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த இரண்டு டிரைவர்களும் முதலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள், நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உண்மையில் யார்தான் இதை திருடியது என்ற கேள்வி எழும்பி உள்ளது.