சென்னையில் சீனா துணை தூதரகம் அமைக்கப்படும்: பெய்ஜிங்கில் பிரதமர் மோடி தகவல்
பெய்ஜிங்: சென்னையில் சீனா துணை தூதரகம் அமைக்கப்படும் என்று பெய்ஜிங்கில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர் முதன்முதலாக சீனாவுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சென்றார். இன்று தலைநகர் பெய்ஜிங்கில் பிரதமர் மோடி, சீன பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேசினார்.
இருவரது தலைமையில் இருதரப்பு தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையை அடுத்து இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். சீன பிரதமர் லீ கெகியாங் பேசியதாவது:
இந்தியா - சீனா இடையே 24 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. 21-ம் நூற்றாண்டு என்பது ஆசியாவுக்கானது.
நாம் நமது அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். நமது தொடர்பை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேஉள்ள வர்த்தகம் என்பது சமநிலையானதாக இருத்தல் அவசியம்.
இவ்வாறு கெகியாங் கூறினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு சீனா மிகவும் முக்கியமான நட்பு நாடு. இருதரப்பிடையேயான உறவு மாறவேண்டும். இது நமக்கான வரலாற்றுக் கடமை.
எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க இந்தியா விரும்புகிறது. கைலாஷ் மானசரோவருக்கு செல்ல அனுமதி அளித்த சீனாவுக்கு மிகவும் நன்றி.
செங்குடு மற்றும் சென்னையில் இருநாடுகளின் தூதரங்களை திறப்பது, இருநாடுகள் இடையே அதிகரித்துவரும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் உறவை விரிவாக்க உதவும் என்றார்.