காபூலில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அருகே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைப்படை தாக்குதல்களில் 24 பேர் பலியாகினர், 91 பேர் காயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் திங்கட்கிழமை மாலை தாலிபான் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். அப்போது அமைச்சக ஊழியர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
குண்டுவெடிப்பு சப்தம் கேட்டு ராணுவ வீரர்கள், போலீசார், பொது மக்கள் ஓடி வந்தனர். அந்த நேரம் பார்த்து மற்றொரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்த இரட்டை தாக்குதல்களில் 24 பேர் பலியாகினர், 91 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த போராளிகள் தாக்குதல் நடத்தி 16 பேரை கொன்ற 2 வாரங்களுக்குள் இந்த இரட்டை தாக்குதல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.