லிபியா கடற்பரப்பில் 2 படகுகள் கவிழ்ந்து 240 அகதிகள் பலி?
லிபிய கடல் பகுதியில் 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் 240 அகதிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
திரிபோலி: லிபியாவின் கடற்பரப்பில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 240 அகதிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து 2 ரப்பர் படகுகளில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300 அகதிகள் இத்தாலியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் லிபியாவின் மெரிட்டேரின் கடல் பகுதியை அடைந்தபோது மோசமான வானிலை காரணமாக 2 படகுகளும் நிலை தடுமாறு கவிழ்ந்தன.
இதில் படகுகளில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கி உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த இத்தாலிய கடற்படையினர் 5 கப்பல்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் வந்தடைவதற்குள் 240 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
எஞ்சியோரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இச் சம்பவத்துக்கு ஐ.நா தூதர் பிலிப்போ கிராண்டி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.; இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்பிரிக்க அகதிகளை பாதுகாக்க முகாம்கள் அமைத்தால் புலம் பெயரந்து படகுகளில் லிபியா செல்லும் போது ஏற்படும் விபத்துக்களினால் உண்டாகும் உயிரிழப்புகளை தடுக்க இயலும் என்றார்.
படகு விபத்து குறித்த தகவலின் பேரில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் தகவலை சர்வதேச புலம் பெயர்வோர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் லியோனா தோயலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் மெரிட்டேரியன் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 4 ஆயிரத்து 220 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றும், கடந்த 2015-ம் ஆண்டு முழுவதும் 3 ஆயிரத்து 777 பேர் பலியாகினர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.