கலிபோர்னியாவில் மோசமான காட்டுத் தீயால் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
சான்டா அனா சூறாவளிக் காற்றின் காரணமாக காட்டுப் பகுதியில் இருந்த சறுகுகள் உரசி தீப்பிடித்தது. மலைகளை இரையாக்கிக் கொண்ட காட்டுத் தீ குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவியதால் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய காட்டுத் தீயானது ஊஸ்லே தீ என்று அழைக்கப்படுகிறது. சுமார் 22 சதுர மைல்களுக்கு இந்த தீயானது பரவியது. காட்டுப் பகுதியில் இருந்து எட்டு வழி நெடுஞ்சாலையை கடந்து சான்டா மோனிகா மலைகள் வழியாக ஊடுருவி போஷ் மலிபுவில் வீடு மற்றும் கார்களை சூறையாடியது.
வடக்குப் பகுதியில் காட்டுத்தீயின் கோரத்தாண்டவம் பற்றி வெளியாகும் செய்திகள் இன்னும் மோசமாக இருக்கிறது. இந்த தீயினால் 25 பேர் பலியாகியுள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத் தலைநகரான சேக்ராமென்டோவில் இருந்து 90 மைல்கள் தூரத்தில் இருக்கும் மவுண்டயின் டவுன் ஆஃப் பாரடைஸ் பெருத்த சேதத்தை கண்டுள்ளது. பாரடைஸ் முழுவதும் புகைசூழ்ந்திருக்கிறது, இந்த பேரழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் நின்ற கார்கள் தீயில் கருகிய எலும்புக்கூடுகளாக நிற்கின்றன. 23.4 மில்லியன் கலிபோர்னிய மக்களுக்கு சிகப்புக் கொடி எச்சரிக்கையானது கொடுக்கப்பட்டுள்ளது. தீயானது சிகோ சிட்டியை தாக்கக்கூடும் என்பதால் இந்த நகரத்தில் இருக்கும் மக்கள் வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.