சிங்கப்பூர்: போலி சர்ட்டிபிகேட் கொடுத்த 7 இந்தியர் உள்பட 25 வெளிநாட்டினருக்கு சிறை!
கோலாலம்பூர்: சிங்கப்பூரில் வேலையில் சேர்வதற்காக போலி கல்வி சான்றிதழ் கொடுத்த 7 இந்தியர்கள் உள்பட 25 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டினரின் வேலை நியமனம் குறித்த ஆவணங்களை, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்தது.
அதில் 7 இந்தியர்கள் உள்பட 25 பேர் போலி கல்வி சான்றிதழ்கள் கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 22 பேருக்கு 10 வாரம் சிறை தண்டனையும், 2 பேருக்கு 12 வாரம் சிறை தண்டனையும், ஒருவருக்கு 4 வாரம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றவர்களில் 4 பேர் பெண்கள் ஆவர்.
இதுபோன்ற குற்றத்திற்காக 2012ஆம் ஆண்டில் 43 பேரும், 2013ஆம் ஆண்டில் 78 பேரும் தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.