கோலாலம்பூர் மதரஸா பள்ளியில் கொளுந்து விட்டு எரிந்து தீ... மூச்சுத்திணறி பலியான மாணவர்கள்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மதரஸாவில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 25 பேர் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்.
கோலாலம்பூர்: மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் தி தருல் குரான் இட்டிஃபா என்ற மதபோதனை பள்ளியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் மாணவர்கள் ஆவர்.
அங்குள்ள டேடக் கெராமத் என்ற இடத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் தீவிபத்து நிகழ்ந்துள்ளது.
பள்ளியில் 13 முதல் 17 வயதுடைய மாணவர்கள் அதிகம் பேர் படித்து வருகின்றனர். இவர்களை தீ காவு கொண்டுள்ளது.
மதரஸா பள்ளியில் தீ விபத்து
தி தருல் குரான் இட்டிஃபா எனும் பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்புத்துறை இயக்குநர் கிருதீன் தர்மான் கூறியுள்ளார்.
மூச்சுத்திணறி பலி
தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில் ஏற்பட்ட புகையினாலேயே மூச்சுத்திணறி பலியாகியுள்ளதாக கிருதீன் தர்மான் தெரிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உறவினர்கள் கதறல்
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து பற்றி கேள்விப்பட்ட உடன் உறவினர்களும், பெற்றோர்களும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
|
மலேசியா பிரதமர் இரங்கல்
மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக் தீ விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விபத்து ஆழ்ந்த வேதனை அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மோசமான தீ விபத்து
மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து என்றும் தீ விபத்திற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.