'அமெரிக்காவில் 25% தலித்களுக்கு ஜாதி பாகுபாடு நடக்கிறது'.. கலிபோர்னியா பல்கலை முன்னாள் மாணவர் வேதனை
கலிபோர்னியா: மாணவர்கள் பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் ஜாதி என்பதையும், சேர்க்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கிய நிலையில் அமெரிக்காவில் உள்ள 25 சதவிகித தலித் மக்கள் ஜாதிரீதியிலான பாகுபாட்டை சந்திக்கிறார்கள் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரேம் பாரியர் கூறியுள்ளார்.
திண்டுக்கல் ஒரு தினுசுதான்.. வ.உ.சி., வேலுநாச்சியார் வேடத்துடன் வந்தால் 2 சிக்கன் பிரியாணி இலவசம்!
அமெரிக்காவின் மிகப்பெரிய பிரபலமான பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகமாகும். 23 கேம்பஸ், 4.85 லட்சம் மாணவர்கள், 55 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் என உலக அளவில் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
ஜாதியப்பாகுபாடு, நிற ஏற்றத்தாழ்வு உலகமெங்கும் உலா வரும் நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் ஜாதியப்பாகுபாடு ஆட்டிபடைத்தது. அங்கு மாணவர்கள் மீது சாதிய ரீதியிலான அடக்குமுறைகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து 23 கேம்பசிலும், ஜாதிய பாகுபாடு குறித்து விசாரணை நடத்தியது பல்கலைக்கழக நிர்வாகம். இதன் பின்னர் மாணவர்கள் மீதான பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையின் பாதுகாக்கப்பட்ட பிரிவில் ஜாதி என்பதையும் சேர்க்க கலிபோர்னியா
பல்கலைக்கழக நிர்வாகம் கொள்கை முடிவு எடுத்துள்ளது.
முன்னாள் மாணவர் பேட்டி
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில்
கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஜாதிய பாகுபாடு குறித்து திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரேம் பாரியர். இவர் நேபாளத்தை சேந்தவர். தலித் என்ற ஒரே காரணத்துக்காக பிரேம் பாரியரித்தின் குடும்பத்தின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவரது குடும்பம் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.
உன் பெயர் என்ன? என்று கேட்டார்கள்
அப்போது முதல் அமெரிக்காவில் தான் சந்தித்த ஜாதிய பாகுபாடு குறித்து பிரேம் பாரியர் கூறியதாவது:- என் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஜாதி பாகுபாடுகளை அனுபவித்தேன். முதுகலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்தபோது பே ஏரியா ரயில் நிலையத்தில் நேபாளத்தைச் சேர்த்த இரு மாணவர்களைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் என்னிடம், 'உன் பெயர் என்ன?' என்று கேட்டார்கள். பிரேம் பரியார்' என்று கூறினேன். என்னுடைய கடைசிப் பெயரைக் கேட்டதும், அவர்கள் என்னை கீழிருந்து மேல் நோக்கிப் பார்த்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கிண்டலாக சிரித்துக் கொண்டார்கள், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஏன்? அவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
இது இந்திய பிரச்சினை
ஜாதியை எளிதில் அடையாளம் காணக்கூடிய அடையாளம் பெயரின் கடைசியில் இருப்பதால் இதனை வைத்து என்னை அவமானப்படுத்துவதை உணர்ந்தேன். அமெரிக்காவில் உள்ள 25 சதவிகித தலித் மக்கள் ஜாதிரீதியிலான பாகுபாட்டைச் சந்திக்க நேரிடுகிறது.என்று பிரேம் பாரியர் கூறியுள்ளார். ''பேராசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள் உட்பட அனைவரிடமும் எனது மீதான ஜாதி ரீதியிலான பாகுபாட்டை எடுத்துக் கூறினேன். ஆனால் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. பல்கலைக்கழக கேம்பஸில் உள்ள தெற்காசியர்கள் கூட எங்களுடைய பிரச்சினையை கேட்கவில்லை. ஒரு முறை செனட் கூட்டத்தில் தலித் அல்லாத இந்தியப் பேராசிரியர் ஒருவர் சாதியை "இந்தியப் பிரச்சனை" என்று விவரித்ததாகவும் பிரேம் பாரியர் தெரிவித்துள்ளார்.
பாகுபாடு காட்டப்படுகின்றனர்.
நீங்கள் இந்தியாவைப் பற்றி பேசுகிறீர்களா? நான் நேபாளத்தை சேர்ந்தவன். இது இந்தியாவைப் பற்றியது மட்டுமல்ல. இது நேபாளம் மற்றும் பங்களாதேஷ் மற்றும் இலங்கை பற்றியது. எத்தனையோ தெற்காசிய மக்கள் தங்கள் ஜாதி அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகின்றனர். பல தலைமுறைகள், தீண்டத்தகாதவர்களாகத் தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். கழிக்கின்றனர் என்று அப்போது தான் இந்தியப் பேராசிரியருக்கு விளக்கம் அளித்ததாகவும் பிரேம் பாரியர் கூறியுள்ளார்.
அமைதி கூடாது
எண்ணற்ற கூட்டங்கள் , மாநாடுகள் மற்றும் மின்னஞ்சல்களுக்குப் பிறகு, தனது துறையிலும், தனது பள்ளியிலும், இப்போது கால் மாநிலம் முழுவதிலும், நாட்டின் மிகப்பெரிய நான்கு ஆண்டு பொதுப் பல்கலைக்கழக அமைப்பிலும் ஜாதி பாதுகாப்பைப் பெற முடிந்தது என்று பிரேம் பாரியர் கூறுகிறார். ''நீங்கள் இப்போது அமைதியாக இருந்தால், நாம் முன்னேறத் தயங்கினால், மற்றொரு தலைமுறை அதே காரணத்திற்காக போராட வேண்டும்'' என்று கூறுகிறார் அவர்.
என்னால் முடியவில்லை
''நான் ஒரு தலித் அறிஞராக இருக்கவும், ஜாதி பிரச்சினைகளைப் பற்றிக் கற்பிக்கவும் விரும்புகிறேன், ஆனால் நான் ஏழைப் பின்னணியில் இருந்து வருவதால் என்னால் அதை செய்ய முடியவில்லை. மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைகளில் தலித் குரல்கள் இருக்கும் வரை, புரிதல் இல்லாத நிலையே இருக்கும்'' என்றும் பிரேம் பாரியர் வேதனையுடன் கூறுகிறார்.
இவர்களால் அறிய முடியாது
தலித் அல்லாதவர்களோ அல்லது பிற பின்னணி உள்ளர்களோ ஜாதி பாகுபாட்டின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள பிரேம் பாரியர் ஆனால் இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை தனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் இந்த வெற்றியை அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.