மும்பைத் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி லக்வி பாக். சிறையில் இருந்து விடுதலை
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான லக்வி பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜகியுர் ரஹ்மான் லக்வியை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்ட விரோதமானது என்றும், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து லக்வி எந்த நேரத்திலும் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த தீர்ப்பு தொடர்பாக இந்தியா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் லக்வியை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், லக்வி போன்ற தீவிரவாதிகள் ஜெயிலில் இருந்து வெளியில் வராமல் இருக்க பாகிஸ்தான் அரசு உறுதியளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகலில் லக்வி விடுதலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்தியா விரும்புகின்றது. ஆனால் லக்வியை விடுதலை செய்தது துரதிர்ஷ்டவசமானதாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்துள்ளது என்றார்.