அடக் கொடுமையே இது கூடவா இவருக்கு எங்க இருக்குன்னு தெரியாது!
பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் சீனப் பெருஞ்சுவர் எங்கு உள்ளது என்பது தெரியாமல் விழித்த கதை வைரலாகியுள்ளது.
அங்கோரா: மேஹூ அமிதாப் பச்சன் போல்ராஹு.. கம்ப்யூட்டர் ஜி கிளிக்.. என்ன ஞாபகம் வருதா.. அதேதான்.. அதைப் பற்றிய செய்திதான் இது. ஆனால் பாஷை மட்டும் வேற.
Who Wants to be a Millionaire? இதுதான் கோன் பனேஹா குரோர்பதி, நீங்களும் வெல்லலாம் கோடி போன்ற நிகழ்ச்சிகளின் ஒரிஜினல் வடிவம். இது ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த பாஷையில் நடத்தப்படுகிறது..
இந்த போட்டி எப்படி நடக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த கதைதான். ஆரம்பத்தில் ஜாலியான கேள்விகள், போகப் போக கிடுக்கிப் பிடி கேள்விகள்.
உலகெங்கிலும் இந்த நிகழ்ச்சிக்கான டிசைன் ஒன்றுதான். என்னதான் ஆட்டத்தில் கடினமான கேள்விகள் இருந்தாலும் முதல் சில கேள்விகள் சுலபமாகத்தான் இருக்கும். இதெல்லாம் ஒரு கேள்வியானு யோசிக்கற மாதிரி ரொம்ப ஈஸியா இருக்கும்.
துருக்கியிலும் இந்த நிகழ்ச்சி ஒரு டிவியில் ஒளிபரப்பாகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சு ஆயான் என்ற 26 வயது பெண் பங்கேற்றார். அவருக்கு முதல் சுற்றில் நான்காவது கேள்வியாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி கூட சிம்பிளாக பதில் சொல்லி விடுவார். அப்படி ஒரு சப்பைக் கேள்வி. கேள்வி என்னவென்றால் சீனப் பெருஞ்சுவர் எங்கே இருக்கிறது? இந்த கேள்விக்கு தேர்ந்தெடுக்க அளித்த விடைகள் சீனா, இந்திஸ்தான் (அதாங்க இந்தியா), சவுத் கொரியா மற்றும் ஜப்பான் .
ஆனால் பதில் சொல்ல தெரியாமல் தத்தளித்த சு ஆயான். முதல் லைப் லைனை பயன் படுத்தி பார்வையாளர்களிடம் பதிலை கேட்டார் அவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுத்துக் கூறியும் கூட ஆயானுக்கு அதில் திருப்தி வரவில்லை. சரி அடுத்த லைப்லைனுக்குப் போனார். அவரது நண்பரிடம் கேட்டார். நல்ல வேளையாக அவர் சொன்ன பதிலை ஏற்று விடையைக் கூறி தப்பித்தார் ஆயான்.
அடுத்து நடந்தது நமக்குத் தேவையில்லை. ஆனால் துருக்கியே இவரால் தலை குனிந்து காண்டாகிக் கிடக்கிறதாம். இந்த சின்ன கேள்விக்குக் கூட பதில் தெரியாதாம்மா என்று ஆளாளுக்கு வறுத்து வருகின்றனராம். அதை விட முக்கியமாக துருக்கியின் கல்வி முறையே சரியில்லை என்ற விமர்சனங்களும் கச்சை கட்டி பறக்கின்றன.
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா!