தாய்லாந்து மலையில் பஸ் கவிழ்ந்து 27 பேர் பலி!
பாங்காக்: தாய்லாந்தின் வடக்கு பகுதியில் மலைப் பாதையில் நடந்த பஸ் விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.
களப் பணிக்காக உள்ளூர் அரசு பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வரிசையாக சில பேருந்துகள் அருகில் உள்ள மாகாணங்களுக்கு சென்று கொண்டிருந்தன.
அப்போது, சரியாக உள்ளுர் நேரப்படி இரவு 8.40 (1340 ஜி.எம்.டி) மணிக்கு மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியான தாக் மலைப்பாதையிலிருந்து கீழ்நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒரு பேருந்தின் பிரேக் செயலிழந்தது.
இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலை வளைவில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச்சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து தடுப்பை மீறி 150 மீ்ட்டர் மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகின் மிக மோசமான சாலைகள் உள்ள நாடுகளில் ஒன்றாக விளங்கும் தாய்லாந்தில் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
அங்கு 60 சதவீத விபத்துக்கள் ஓட்டுனரின் தவறு மற்றும் மோசமான சாலைகளால் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.