யோகா தெரியும், கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட 'டோகா' பற்றி தெரியுமா உங்களுக்கு?
பெய்ஜிங்: ஹாங்காங்கில் புதிய உலக சாதனை படைக்க 270 நாய்கள் தங்களின் உரிமையாளர்களுடன் சேர்ந்து டோகா எனப்படும் யோகாவை செய்துள்ளன.
நாய்கள் யோகா செய்வதற்கு டோகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் டோகாவில் புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டோகா ஆசிரியர் சூசட் ஆக்கர்மேன் தலைமையில் நடந்த டோகா நிகழ்ச்சியில் 270 நாய்கள் தங்கள் உரிமையாளர்களுடன் கலந்து கொண்டு ஒரு மணிநேரம் யோகா செய்தன.
உரிமையாளர்கள் தங்கள் செல்ல நாய்கள் யோகா செய்ய உதவினர்.
இது குறித்து ஆக்கர்மேன் கூறுகையில்,
டோகா மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். டோகா நிகழ்ச்சி நல்லவிதமாக நடந்தது. ஹாங்காங் மக்கள் வேலை வேலை என்று பிசியாக உள்ளனர். அவர்களில் பலர் செல்லப் பிராணிகள் வளர்த்தாலும் அதை பணியாட்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள். டோகா வகுப்பிற்கு வந்தால் குறைந்தது ஒரு மணிநேரமாவது உங்கள் நாயுடன் நேரம் செலவழிக்கலாம்.
டோகா வகுப்பில் நீங்களும், உங்கள் நாயும் மட்டும் தான் இருப்பீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே இன்டர்நெட், ஃபேஸ்புக், செல்போன் என எதுவும் இருக்காது. அதனால் உங்களின் செல்லப்பிராணியுடன் நன்கு பழக முடியும் என்றார்.
டோகா நிகழ்ச்சி இன்னும் கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று டோகா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.