பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள் - அதிகாரிகள் எச்சரிக்கை
பேஸ்புக்கில் போலி கணக்குகள் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கலிபோர்னியா : பேஸ்புக் பயனாளர்களில் மொத்தம் 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களிலேயே மிகப்பெரிய நிறுவனம் பேஸ்புக். உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள நிறுவனம் என்கிற பெருமையைப் பெற்று உள்ளது. இதன் தலைமையகம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.
இந்நிறுவனம் சமீபத்தில் தனது காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்டது. அதில் அதிகரித்துள்ள போலி கணக்குகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
சமீபகாலமாக போலி கணக்குகள் பேஸ்புக்கின் நம்பிக்கைத்தன்மையை குலைத்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரு கோடி போலி கணக்குகள் என்கிற அளவில் இருந்ததாகவும், ஆனால் தற்போதைய ஆய்வின்படி 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படி 2.1 பில்லியன் பயனாளர்களில் 2-3% விரும்பத்தகாத கணக்குகளைப் பயன்படுத்தி வருகிறது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டு கணக்கைக் காட்டிலும், இந்த காலாண்டில் 6% போலி கணக்குகள் அதிகரித்து உள்ளன. மொத்தத்தில் பேஸ்புக்கில் இருக்கும் கணக்குகளில் 13% அதாவது 27 கோடி கணக்குகள் போலி என்று அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதனால் கணக்குகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க அந்நிறுவன பொறியாளர்கள் உழைத்து வருகிறார்கள் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், பேஸ்புக் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.