ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 28 பேர் பலி, 300 பேர் காயம்
காபுல்: ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகம் அருகே விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய பாதுகாப்பு படையினர் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு இன்று மதியம் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி கேட் அருகே தனது காரில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்த தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். காபுல் தாக்குதலில் அந்த நகரில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானின் மர்தான் நகரில் உள்ள கலால் மற்றும் வரி விதிப்பு அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பின்னர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை அவர் வெடிக்கச் செய்தார். இதில் 12 பேர் காயம் அடைந்தனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.