மளமளவென்று உயர்ந்த பலி எண்ணிக்கை.. இந்தோனேசியாவில் 373 பேர் பலி.. சுனாமியின் கோர தாண்டவம்!
இந்தோனேசியாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர்.
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த வருடம் மிக மோசமான வடுக்களுடன் இந்தோனேசியாவிற்கு முடிய போகிறது. 2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு நிகரான சுனாமி ஒன்று தற்போது இந்தோனேசியாவை தாக்கி உள்ளது.
யாருமே எதிர்பார்க்காத வகையில் அங்கு பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மக்களை மீட்க முடியாமல் அரசும் திணறி வருகிறது.
சுனாமி ஏற்பட்டது
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை யாருமே நினைக்காத நேரத்தில் இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் கடல் அலை பல மீட்டர் உயரம் எழும்பியது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாமலே அந்த பகுதியை இந்த சுனாமி தாக்கி உள்ளது. மொத்தமாக கடல் ஊருக்குள் வந்தது.
வெடித்த எரிமலை
சனிக்கிழமை இரவே இந்தோனேசியாவில் உள்ள கரகட்டாவ் எரிமலை வெடிக்க தொடங்கியது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாகத்தான் இந்த பெரும் சுனாமியே ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் நில அடுக்கு நகர்வு ஏற்பட்டுள்ளது. இது இந்த மோசமான சுனாமியை தாக்கி உள்ளது.
மோசமான சேதம்
இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது. இங்கு இருக்கும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இதனால் நீரில் மூழ்கி உள்ளது. 1.5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை
தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர். 2000 பேர் காயமடைந்துள்ளனர். 1200க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.