நார்வேயில் சோகம்... பைசர் தடுப்பூசி போட்ட 29 முதியவர்கள் உயிரிழப்பு!
ஒஸ்லோ: நார்வே நாட்டில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்ட 29பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பாவில் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக குறைக்க பைசர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பல்வேறு சந்தேகங்கள்
உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகினறன. இந்த நிலையில் நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்ட 29பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
29பேர் உயிரிழப்பு
பைசர் தடுப்பூசி செலுத்தப்பெற்ற 29முதியவர்கள் உயிரிழந்ததாக நார்வே அரசு தெரிவித்துள்ளது. இது தவிர இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த இறப்புகள் குறித்து விசாரணையை நார்வே அரசு முடுக்கிவிட்டுள்ளது. பலவீனமான உடலைக் கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பாதகமான எதிர்வினைகள் இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிரடி முடிவு
ஆனால் அவர்கள் பைசர் தடுப்பூசியால்தான் இறந்தார்கள்? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இறந்த 23 பேரில் 13 பேர் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பாவில் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக குறைக்க பைசர் முடிவு செய்தது.
எச்சரிக்கை
மேலும் 80 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எதிராக நார்வே பொது சுகாதார நிறுவனம் இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. குறுகிய ஆயுட்காலம் உள்ளவர்கள் தடுப்பூசியால் பெரிதும் பயனடையமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் இருந்து இதுவரை நார்வேயில் பைசர் மற்றும் மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை 30,000-க்கும் மேற்பட்டோர் பெற்றுள்ளனர்.