பர்கினா பாஸோ ஹோட்டலில் அல் கொய்தா தாக்குதல்.. 29 பேர் பலி: இந்தியர்கள் யாரும் இல்லை
ஒகடுகூ: மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாஸோவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வெளிநாட்டவர்கள் உள்பட 29 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாஸோவில் இருக்கும் ஒகடுகூ நகரில் உள்ள ஸ்ப்லெண்டிட் என்ற 4 நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதன் அருகில் உள்ள உணவு விடுதிக்குள் அல் கொய்தா தீவிரவாதிகள் 3 பேர் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு புகுந்தனர்.
இதையடுத்து பிரெஞ்சு படைகளின் உதவியோடு பர்கினா பாஸோ படையினர் தீவிரவாதிகள் இருக்கும் இடைத்தை சுற்றி வளைத்தனர். வெளிநாட்டவர்களும், ஐ.நா. அதிகாரிகளும் அதிகம் வரும் ஸ்ப்லெண்டிட் ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் 100க்கும் மேற்பட்டோரை பிணையக்கைதிகளாக பிடித்தனர்.
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அதிகாலை 2 மணி வரை துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். முன்னதாக தீவிரவாதிகள் சுட்டதில் 10 வெளிநாட்டவர்கள் உள்பட 29 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாக்குதல் குறித்து பர்கினா பாஸோ அதிபர் ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர் ரேடியோவில் கூறுகையில்,
தீவிரவாத தாக்குதலால் நாடே அதிர்ச்சியில் உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக நம் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது என்றார்.