காபூல் தாக்குதலில் 29 பேர் பலி... தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல்
காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசுக்கு சொந்தமான கட்டடம் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
பலத்த பாதுகாப்பு நிறைந்த காபூலில் தீவிரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளனர். திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில் ஊனமுற்றோர் மற்றும் தியாகிகளுக்கான குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்குள் காருடன் புகுந்த மூன்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகளை வீசி எறிந்தனர். கண் மூடித்தனமாக சுட்டனர். மேலும், தற்கொலை படை தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதில், போலீஸ் ஒருவர் உட்பட 29 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதலில் இறங்கினர். இதில், தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அரசு அலுவலக வளாகத்தில் இருந்த 357 பேரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, ரோந்து பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பு ஏற்கவில்லை.
சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் இருந்து 14 ஆயிரம் அமெரிக்க வீரர்களில் 5 ஆயிரம் வீரர்கள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.