பாக்தாதில் 3 கார் குண்டு வெடிப்பு.... 94 பேர் பலி!
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாதில் புதன்கிழமை அடுத்தடுத்து மூன்று இடங்களில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 94 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஆண்டில், மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலை தாங்களே நடத்தியதா இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.
பாக்தாதின் வடக்குப் பகுதியில், ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் சதர் நகரில், மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில் புதன் காலை 10.00 மணிக்கு சக்தி வாய்ந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்தனர். 65 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சக்தி வாய்ந்த தாக்குதலில், அருகிலிருந்த கடைகள் தீப்பற்றி எரிந்தன. சாலையில் இருந்த வாகனங்கள் உருக்குலைந்தன.
இந்த பயங்கரத் தாக்குதலுக்கு ஈராக்கில் நிலவி வரும் அரசியல் குழப்பமே காரணம் என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் ஏராளமானோர் கூடி, அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து, பாக்தாதின் வடமேற்கு பகுதியில் உள்ள காதிமியா என்ற இடத்தில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 17 பேரும், பாக்தாதின் மேற்குப் பகுதியில் உள்ள ஜமீயா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு கார் குண்டு தாக்குதலில் 13 பேரும் உயிரிழந்தனர்.
ஐ.எஸ். அறிவிப்பு
இந்தத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர்.
இதுகுறித்து இணையதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "அபு சுலைமான் அல்-அன்சாரி என்பவர் வெடிபொருள் நிரப்பிய காரை ஒட்டிச் சென்று தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கணிசமான பகுதிகளை ஈராக் ராணுவம் மீட்டாலும், நாட்டின் மேற்குப் பகுதியில் இந்த பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது.
ஈராக்கின் பிற பகுதிகளில் ஊடுருவி அவர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
94 பேரை பலி கொண்ட இந்த தாக்குதலுக்கு ஈராக் நாட்டில் உள்ள ஐ.நா தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.