பாரீஸ் தாக்குதலுடன் தொடர்புடைய 3 பேர் பெல்ஜியத்தில் கைது
ப்ருசெல்ஸ்: பாரீஸ் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 3 பேர் பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 129 பேர் பலியாகியுள்ளனர். 352 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் 88 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடந்த ஒரு இடத்தில் நின்ற கார் பெல்ஜியம் பதிவு எண் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸின் புறநகர் பகுதியில் போலீசார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
சோதனையில் பாரீஸ் தாக்குதலுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரான்ஸை சேர்ந்தவர்கள். இதற்கிடையே பாரீஸில் இறந்து கிடந்த தீவிரவாதிகள் அருகே இரண்டு பாஸ்போர்டுகள் இருந்தன. ஒன்று எகிப்து நாட்டு பாஸ்போர்ட் ஆகும். மற்றொன்று சிரியா பாஸ்போர்ட் ஆகும்.
பெல்ஜியத்தை சேர்ந்த ஏராளமானோர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல்களில் பலியானவர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் லாங் பீச்சில் உள்ள கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக மாணவர் நொஹேமி கோன்சாலஸ்(23) ஒரு செமஸ்டருக்காக பாரீஸ் வந்துள்ளார். வந்த இடத்தில் அவர் பலியாகியுள்ளார்.