கார் மோதி பத்துமலை முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற 3 பக்தர்கள் சாவு.. மலேசியாவில்
மலேசியா: மலேசியாவில், பத்துமலை முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலேசியாவில் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலம் பத்துமலை முருகன் கோயில். இங்குள்ள பிரமாண்டமான முருகன் சிலை உலகம் முழுவதும் பிரசித்தி.
மலேசிய வாழ் தமிழர்கள், முருகப்பெருமானின், தைப்பூச திருவிழாவின்போது, பத்துமலை முருகன் கோயிலுக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் செல்வது வழக்கம். அதுபோல, செனாவாங்கிலிருந்து பத்துமலைக்கு தமிழர்கள் பலர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர்.
செரிபெட்டாலிங் என்ற பகுதியில், வடக்கு-தெற்கு ஹைவே பகுதியில் இன்று காலை அந்த யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக சென்ற ஒரு பிஎம்டபிள்யூ கார், பக்தர்கள் மீது சரமாரியாக மோதிவிட்டு சென்றுள்ளது.
இந்த விபத்தில், பாதயாத்திரை சென்ற மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தோர் கெபங்சான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.