கேமரூனில் ஓடும் பேருந்தில் 30 பயணிகளை கடத்திய போக்கோ ஹரம் தீவிரவாதிகள்
யாவுண்டே: நைஜீரியா எல்லையையொட்டி உள்ள மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பேருந்தில் சென்ற 30 பயணிகளை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
போக்கோ ஹரம் தீவிரவாதிகள் ஆப்பிரிக்காவின் மத்திய, வடகிழக்கு பகுதிகளில் அட்டூழியம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நைஜீரியா எல்லையையொட்டி உள்ள மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் உள்ள தவ்ரூ நகரில் பேருந்தில் சென்று கொண்டிருந்த 30 பயணிகளை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட பயணிகள் என்ன ஆனார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவர்களை தீவிரவாதிகள் தாக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கெராவா நகரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் ராணுவ வீரர்கள் 9 பேர் காயம் அடைந்தனர்.
ஜனவரி 1ம் தேதி கெராவா பகுதியில் தீவிரவாதிகள் பேருந்தில் சென்ற 11 பயணிகளை கொலை செய்தனர்.
ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவுக்கு கடந்த 2009ம் ஆண்டில் இருந்து போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் தலைவலியாக உள்ளது. தீவிரவாதிகள் ஷரியா சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறார்கள். மேலும் நைஜீரியாவின் வடக்கு பகுதியை முஸ்லீம்களின் மாநிலமாக்க தீவிரவாதிகள் விரும்புகிறார்கள்.
நைஜீரியாவின் அண்டை நாடுகளான காமரூன், சாட் மற்றும் நைஜர் ஆகியவையும் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.