பாலகோட்டில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர்- பாகிஸ்தான் மாஜி அதிகாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் முன்னாள் தூதரக அதிகாரி ஆகா ஹிலாலி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பேட்டியளித்தவர் சாமானியர் கிடையாது. அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் என்ற பதவி உட்பட பல பதவிகளை வகித்தவர்தான், ஆகா ஹிலாலி.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள், வீர மரணமடைந்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்த இந்திய உளவு அமைப்புகள் பதிலடி தர தயாராகின.
அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலுக்கு துப்பாக்கி, குண்டுகளோடு வந்த கலவரக்காரர்கள்.. விசாரணையில் அம்பலம்
இதன் ஒரு பகுதியாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி மாதம் 26ம் தேதி, அதிகாலையில் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தின.
தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்பட்டதாகவும், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய தரப்பில் கூறப்பட்டாலும் பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது.
தங்கள் மண்ணில் தீவிரவாத முகாம்கள் செயல்படவில்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில், இந்திய தாக்குதலில், 300 பேர் கொல்லப்பட்டதாக ஆகா ஹிலாலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த உருது மொழி டிவி சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.