100 ஆண்டுகளாக புத்தவிகார் வழிபாட்டுடன் ஹூப்ளியில் 300 தமிழ்க் குடும்பங்கள்!
டல்லாஸ்(யு,எஸ்): தெற்கு ஆசிய ஆராய்ச்சி மற்றும் தகவல் நிறுவனமும் (South Asia Research and Information Institute) சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக் கழகமும் இணைந்து, தெற்காசியாவில் புத்தமதத்தின் சகாப்தம் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக இத்தகைய கருத்தரங்களை ஆண்டு தோறும் நடத்தி வருகிறார்கள். டல்லாஸ் சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆண்டு கருத்தரங்கத்கில் ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றார்கள். டல்லாஸ் மட்டுமல்லாமல் ஹூஸ்டன், நியூயார்க், வாஷிங்டன் போன்ற நகரங்களிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் வருகை தந்திருந்தார்கள்.
யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ், ஆஸ்டின் பல்கலைக் கழகத்திலிருந்து டாக்டர்: ஆலிவர் ஃப்ரைபர்கர் , புத்த மதத்தில் பிராமணிய சிந்தனைகளும் நெறிமுறைகளும் எவ்வாறு இடம்பெற்றிருந்தது என்ற கருத்தில் உரையாற்றினார். பிராமணியத்திலிருந்து புத்த மதத்தை தழுவியவர்கள், தங்கள் வழக்கங்களையும் புத்த மதத்திற்குள் சேர்த்துக்கொண்டனர் என்று தனது ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி எடுத்துரைத்தார்.
மெய்ன் நகரத்தின் பௌடொய்ன் கல்லூரியிலிருந்து வந்திருந்த டாக்டர் பத்மா ஹோல்ட், ஆந்திர மாநிலத்தில் புத்த மதத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி உரையாற்றினார். பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த புத்தமத மாற்றங்கள் அதைச்சார்ந்த நிகழ்வுகள் பற்றியும் விவரித்தார்.
ஸ்வீடன் நாட்டின் அப்சாலா பல்கலைக் கழகத்திலிந்து வருகை தந்திருந்த டாக்டர்.பீட்டர் ஷல்க் தமிழர்கள் வாழ்வில் புத்தமதத்தின் பங்கைப் பற்றி உரையாற்றினார். சோழர் ஆட்சியிலும், பல்லவர்கள் ஆட்சியிலும் புத்தமதம் தமிழகத்திலும் இலங்கையிலும் அடைந்த வளர்ச்சி பற்றியும் பிற்காலத்தில் அதன் வீழ்ச்சி பற்றியும் விவரித்தார். சீனாவிலிருந்தும் பர்மாவிலிருந்தும் தமிழகம் வழியாக இலங்கைக்கு புத்த பிக்குகள் பயணம் மேற்கொண்டது பற்றியும் கூறினார்.
தமிழகத்தில் புத்தமதத்தை மீட்டெடுத்த அயோத்தி தாசர்
ஜெர்மனியின் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த டாக்டர். கஜேந்திரன் அய்யாதுரை ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வு, தமிழகத்தில் அயோத்தி தாசர் மீட்டெடுத்த புத்தமதமும், சாதியில்லா இலக்கை நோக்கிய இயக்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை களைய புத்தமதத்தில் சேர்ந்து, தமிழகத்தில் ஒரு இயக்கமாக முன்னெடுத்த அயோத்தி தாசர் பற்றியும், முயற்சிகள் பற்றியும் விரிவாகப் பேசினார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக 'தமிழன்' என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தி, முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தவர்.
சாதிகளை ஆதரிக்கும் புத்தபிக்குகள் அமைப்புகளிடமிருந்து அயோத்தி தாசர் விலகி இருந்தார். 'மணிமேகலை துறவு' மூலம் புத்தமதம் தமிழர்கள் ஏற்கனவே கடைப்பிடித்து வந்தது தான். மதம் மாறத்தேவையில்லை நம்முடைய மூதாதையரைப் பின்பற்றுவோம் என்று அயோத்தி தாசர் புது விளக்கம் கொடுத்துள்ளார் எனவும் கஜேந்திரன் குறிப்பிட்டார்.
1720 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் தாழ்த்தப்பட்ட ஒருவர் பள்ளிக்கூடம் நடத்தி வந்ததாகவும், அதில் ஏராளமானோர் பட்டம் பெற்றுள்ளாதாகவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் கஜேந்திரன் தெரிவித்தார். அந்த காலக்கட்டத்தில் சாதி வேறுபாடுகள் இல்லாமல் இருந்ததற்கு இது முக்கிய சான்று என்றும் அவர் கருத்து தெரிவித்தார். .
தமிழகத்தின் சாதியக் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்காக ஆப்ரிக்கா, ட்ரினிடாட், டொபாக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழர்கள் இடம்பெயர்ந்து அங்கு நில உரிமையாளர்கள் ஆகி உள்ளார்கள். அதைப்போல் கர் நாடகத்தின் ஹூப்ளி நகருக்கும் 150 ஆண்டுகளுக்கு முன்னதாக கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் குடியேறியுள்ளார்கள். அயோத்தி தாசரைப் பின்பற்றி அவர்கள் புத்தமதத்திற்கு மாறியுள்ளார்கள்.
புத்த விகார் அமைத்து தலைமுறைகள் தொடர்ந்து இன்றும் வழிபட்டு வருகிறார்கள். தமிழ்ப் பள்ளி நிறுவி தமிழ் கற்றுத்தந்திருக்கிறார்கள். தமிழில் சரளமாக பேசி வருகிறார்கள். அயோத்தி தாசர் போதித்த வழிமுறைகளை அப்படியே கடைப்பிடித்தும் வருகிறார்கள், நேரில் சந்தித்து இன்னும் பல தகவல்களை தெரிந்து கொண்டேன் என்று கஜேந்திரன் கூறினார்.
சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக் கழகத்தின் டாக்டர் ஸ்டீவன் லின்ட்கிஸ்ட் வரவேற்புரை ஆற்றி, கருத்தரங்கத்தை நெறிப்படுத்தி நடத்தினார். பார்வையாளர்களின் கேள்வி நேரமும் இடம் பெற்றது. டாக்டர் பழனியப்பனின் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
-இர தினகர்