பாக்தாத்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தொடர்குண்டுவெடிப்பு - 37 பேர் பலி
பாக்தாத்: பாக்தாத்தில், கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்ற தேவாலயத்தின் அருகே மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும்குடியிருப்புப் பகுதியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் சிக்கி சுமார் 37 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.
தெற்கு பாக்தாத்தில் டோரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது கிறிஸ்துமஸ் ஆலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில், பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் உட்பட 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் மருத்துவக்குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இக்குண்டு வெடிப்பிற்கு சற்று முன்னர், பாக்தாத்நகரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் மார்க்கெட் பகுதியிலும் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், கிறிஸ்தவர்களைக் குறி வைத்து நடத்தப் பட்டிருக்கும் இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அமெரிக்கா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.