ராபர்ட் முகாபேவின் ராஜினாமா நாடாளுமன்றத்தில் அறிவிப்பு... ஜிம்பாப்வே மக்கள் 'வெரி ஹேப்பி'!
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் ராஜினாமா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை மக்கள் கைதட்டி வரவேற்றனர்.
ஹராரே : ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் ராஜினாமா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. முகோபேவின் ராஜினாமாவை அந்த நாட்டு மக்கள் கை தட்டி உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். 37 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராக இருந்து வரும் முகாபே அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வாவை முகாபே பதவி நீக்கம் செய்தார்.
இதனால், ஆளும் ஷானு - பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பமான நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது.
அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டிற்கு வந்ததையடுத்து அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முகாபேவை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார கூட்டம் நடத்தி வருகிறார் அந்த நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரி.
முகாபே ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜிம்பாப்வே நாடாளுமன்றம் அவசரமாக கூடி அவரை பதவி நீக்குவதற்கான மசோதா கொண்டு வரப்பட்டது. மேலும் நாமாளுமன்றத்தை கலைத்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று எம்பிகள் வலியுறுத்தினர். இதனிடையே ஜிம்பாப்வே நாடாறுமன்றத்தில் அதிபர் முகாபே தானாக முன் வந்து பதவி விலகிவிட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதிபரின் ராஜினாமா அறிவிப்பை எம்பிக்களும், நாடாளுமன்றத்தில் கூடி இருந்த மக்கள் கைதட்டி வரவேற்றனர். 93 வயதான அதிபர் ராபர்ட் முகாபேவின் 37 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருவதை அந்த நாட்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். முகாபே ராஜினாமாவை அடுத்து புதிய அதிபராக முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.