யு.எஸ்.ஸை அதிர வைத்த கருப்பினத்தவர் போராட்டம்.. 4 போலீஸார் சுட்டுக் கொலை.. விமானம் பறக்க தடை
வாஷிங்டன்: அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் போலீஸாருக்கு எதிராக நடைபெற்ற போராட்ட பேரணியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு வேறு சம்பவங்களில் கருப்பின இளைஞர்கள் இருவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்பின மக்கள் 'கருப்பு இன மக்களின் உயிரும் கருத்தில் கொள்ளத்தக்கது' என்ற பெயரில், பேரணி டல்லாஸ் டவுன் டவுனில் சென்று கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு அரங்கேறியுள்ளது.
மறைந்திருந்த சிலர் போலீஸாரை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டனர் என்று தெரியவந்துள்ளது. இதில் 4 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டல்லாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு அமெரிக்க விமான போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.