அசந்து தூங்கிய பெண்.. சத்தமில்லாமல் வாய்க்குள் நுழைந்து வயிற்றிற்குள் போன 4 அடி நீள விஷப்பாம்பு!
ரஷ்யாவில் பெண்ணின் வாய்க்குள் சென்ற 4 அடி நீள விஷப்பாம்பை வெளியே எடுத்துள்ளனர்.
மாஸ்கோ : ரஷ்யாவில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது, பெண்ணின் வாய்க்குள் புகுந்த கொடிய விஷமுள்ள 4 அடி பாம்பை மருத்துவர்கள் லாவகமாக வெளியே எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசந்து தூங்கும் போது பலர் வாய் வழியே மூச்சை விடுவது வழக்கம். இதனால் அவர்களது வாய் திறந்திருக்கும். இதனால் வாய்க்குள் கொசு போய் விடும் சம்பவங்களும் நாம் கேள்வியும் பட்டிருப்போம்.. சிலர் அனுபவமும் பட்டிருப்போம். ஆனால் வாய்க்குள் பாம்பே புகுந்த சம்பவத்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ரஷ்யாவில் தான் அப்படி ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யாவின் தஜஸ்தான் மாகாணம் லெவஷி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சம்பவத்தன்று மிகுந்த களைப்பில் வீட்டு வாசலில் படுத்து தூங்கியுள்ளார். தூக்கத்தில் அவர் வாயை திறந்து வைத்து குறட்டை விட்டிருக்கிறார்.
ரஷ்யா சீனா... தடுப்பு மருந்து...கொரோனாவை கட்டுப்படுத்தாது... வல்லுநர்கள் கருத்து!!
வாய்க்குள் புகுந்த பாம்பு
அப்போது அந்த வழியே சென்ற பாம்பு ஒன்று அவர் உடலில் ஊர்ந்து சென்று, வாய்க்குள் புகுந்துள்ளது. ஆனால் இது எதுவுமே தெரியாத அளவிற்கு அப்பெண் அசந்து தூங்கியுள்ளார். பின்னர் தன் வயிற்றிற்குள் ஏதோ மாற்றம் ஏற்படுவதைக் கண்டு திடுக்கிட்டு விழித்த அப்பெண், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
சோதனை
அங்கு தன் வயிற்றிற்குள் ஏதோ அசைவதைப் போல் உணர்வதாக அப்பெண் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அப்பெண்ணை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ நெளிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மயக்க மருந்து கொடுத்து அப்பொருளை வாய் வெளியே எடுக்க அவர்கள் முயற்சித்தனர்.
4 அடி பாம்பு
தொண்டை வழியே ஒரு குழாயை செலுத்தி, வயிற்றுக்குள் சென்று கொண்டிருந்த அந்தப் பொருளை வெளியே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். ஏனென்றால் வெளியே எடுக்கப்பட்டது நான்கடி நீளமுள்ள விஷப் பாம்பு. மருத்துவர்கள் அப்பெண்ணின் வாயில் இருந்து பாம்பை வெளியே எடுக்கும், வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது புதுசால்ல இருக்கு
இதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்னர் காதுக்குள் கரப்பான் பூச்சி போன கதைகளைக்கூட கேட்டிருக்கிறோம். ஆனால் பாம்பு வாய் வழியே சென்றது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
இது சகஜம் தானாம்
ஆனால் நமக்குத் தான் இதெல்லாம் புதுசு. மற்றபடி தங்கள் கிராமத்தில் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான் என்கிறார்கள் லெவஷி கிராமத்தினர். இதனாலேயே அங்கு வீட்டிற்கு வெளியே யாரும் படுத்துத் தூங்க வேண்டாம் என கிராம நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாம்.