ஹஜ்: சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 தமிழர்கள் உட்பட 15 இந்தியர் உயிரிழப்பு
மினா: மெக்கா ஹஜ் யாத்திரையில் மினா நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் ஜார்க்கண்ட், ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் புனித பயணம் கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் செளதி அரேபியாவின் மெக்கா நகரில் குவிந்துள்ளனர். மெக்கா அருகேயுள்ள மினாவில் ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்தனர். 863 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோருக்கு அருகே உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நெரிசலில் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2 தமிழர் உட்பட 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்களில் 9 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் ஜார்க்கண்ட்; ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.
உயிரிழந்த இந்தியர்கள் விவரம்:
1) சம்சுதீன் முகமது, தமிழ்நாடு (பாஸ்போர்ட் எண்: (G6849546)
2) மொகிதீன் பிச்சை, தமிழ்நாடு (பாஸ்போர்ட் எண்:( J5669393)
3) முகமது ருஷ்தம் அலி, ஜார்க்கண்ட்
4) நியாசுல் ஹக் மன்சூருல் ஹக், ஜார்க்கண்ட்
5) சலீம் யூசுப் சேக், மகாராஷ்டிரா
6) முகமது ஹனீப் ஹசன் பாய் சேக், குஜராத்
7) சேக் மதினாபீபி முகமது, குஜராத்
8) திவான் அயூப்ஷா, குஜராத்
9) திவான் ஜூபேதாபீபீ, குஜராத்
10) சோடா ரெஹ்மத் ஹூசாம், குஜராத்
11) பெதாரா பாட்மாபென் கரீம், குஜராத்
12) போலிம் ஹாவ்பாய் இசாக், குஜராத்
13) நகோரி ஜோராபீபி, குஜராத்
14) நகோரி ருக்ஷானா முகமது இசாக், குஜராத்
சம்சுதீன்
மினா நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழரான சம்சுதீன், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் 13 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழர் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ஹஜ் யாத்திரை நெரிசலில் மயிலாடுதுறை சம்சுதீன், தென்காசி முகதீன் பிச்சை, திருச்சி ரெஜிமன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.