அமெரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அனுதாபி துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி; சுட்டவரும் சுட்டுக் கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபரும் உயிரிழந்தார்.
சாட்டனோகாவில் உள்ள ராணுவ சேவை மையத்தினுள் புகுந்த அந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதேபோல் அருகில் இருந்த கடற்படை ரிசர்வ் மையத்திற்கு சென்றும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அந்தப் பகுதியில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேரும், ஒரு போலீஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளனர். அப்போது ராணுவம் பதிலடியாக திருப்பிச் சுட்டதில் அந்த மர்ம நபர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி ஊடங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலுக்கு காரணமான அந்த சுட்டுக் கொல்லப்பட்ட மர்ம நபரின் பெயர் முகமது யூசுப் அப்துல் அஜீஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ் அனுதாபி என்றும் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் கூறிய நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட முகமது யூசுப் அப்துல் அஜீஸ் குவைத்தைச் சேர்நதவர்.
24 வயதான இவர் பொறியியல் படித்தவர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடந்த 2 வருடங்களில் சென்றுள்ளார். இவரது வீடு ஹிக்ஸன் பகுதியில் உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில்தான் அஜீஸின் வீடு உள்ளது.
அந்த வீட்டை ரெய்டு நடத்திய அதிரடிப்படையினர் வீட்டில் இருந்த இரண்டு பெண்களை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றனர். அவர்கள் அஜீஸுக்கு என்ன வேண்டும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் இறங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் தனது பிளாக்கில் இப்படி எழுதி வைத்திருந்தார் அஜீஸ். "சகோதரர்களே, சகோதரிகளே உங்களது விருப்பங்களுக்கு அடிமையாகி உங்களை முட்டாளாக்கிக் கொள்ளாதீர்கள்.
இந்த வாழ்க்கை மிகவும் சுருக்கமானது, கசப்பானது. அல்லாவிடம் உங்களை ஒப்புவிக்கும் நாள் விரைவில் வரும்" என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், "அவரது வார்த்தையை ஒளியாக எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையிலிருந்து நீங்கள் விலகாமல் இருங்கள். 100 சதவீத அர்ப்பணிப்புடன் அவரை பின்பற்றுங்கள். உங்களது சுய விருப்பங்கை பின்னுக்குத் தள்ளிவிடுங்கள்" என்றும் கூறியுள்ளார் அஜீஸ்.
ரம்ஜான் சமயத்தில் இதுபோன்ற தாக்குதல் நடந்திருப்பதால் இதேபோல தனி நபர் தாக்குதல்கள் மேலும் நடக்கலாம் என்ற அச்சத்தில் நாடு முழுவதும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் மக்களை உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். குவைத்தில் பிறந்த இவர் பின்னர் ஜோர்டானில் வளர்ந்தார். அதன் பின்னர் தனது குடும்பத்துடன் 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து குடியுரிமையைப் பெற்றார்.
படுகாயம் அடைந்த நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.