ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும்.. வெடித்து சிரிக்கும் மகள்.. அதன் பின்னால் எத்தனை வேதனை.. வலி!
குண்டு வெடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறாள் 4 வயது பெண் குழந்தை!
Recommended Video
சென்னை: இந்த வீடியோவைப் பார்க்கும் மனிதகுலம் வெட்கித் தலை குனிய வேண்டும்.. தன்னை அறுவெறுப்பாக உணர வேண்டும். எவ்வளவு அழகான உலகத்தை எப்படி அலங்கோலமாக்கி வைத்திருக்கிறோம்.. இந்த மனிதர்களை எப்படித் தண்டித்தால் தகும்.. அத்தனைகோபம் வருகிறது இந்த வீடியோவைப் பார்க்கும்போது.
சிரியா நிலவரம் எல்லோருக்கும் தெரிந்ததே. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நிம்மதியாக சாப்பிட முடியாமல், நிம்மதியாக தூங்க முடியாமல்.. ஏன் நிம்மதியாக சிரிக்கக் கூட முடியாத அளவுக்கு கோர தாண்டவமாடி வருகிறார்கள் ஆயுத வியாபாரிகள்.
அவர்களிடம் சிக்கி எத்தனை எத்தனை விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன தெரியுமா.. பல லட்சம் பேர் அகதிகளாகி விட்டனர். இந்த சிரியாவில் நடக்கும் ஒரு காட்சிதான் இந்த வீடியோவில் உள்ளது.
பாக். நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு.. கொதித்து போன இந்தியா.. மீண்டும் கடும் தாக்கு
தந்தை - மகள்
இத்லிப் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு அப்பாவும், அவருடைய அருமை மகளும் அந்த வீடியோவில் உள்ளனர். அப்பா பெயர் அப்துல்லா. பாப்பா பெயர் செல்வா. சின்னப் பாப்பா. பார்க்க அத்தனை அழகு.. அந்த பாப்பாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா மகளுக்கு ஏதோ சொல்லி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
பெரும் வலி
அப்போது பேச்சின் ஊடாக, குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதாவது குண்டு வீச்சு நடக்கிறது. உடனே மகள் வெடித்துச் சிரிக்கிறாள். அவளுக்கு அவ்வளவு சிரிப்பாக வருகிறது. இங்குதான் பெரும் வலி ஒன்று மறைந்துள்ளது. அதாவது வெடிகுண்டுச் சத்தத்தால் தனது மகள் பயந்து போய் விடக் கூடாது என்பதற்காக வெடிகுண்டுச் சத்தம் கேட்டால் சிரிக்க வேண்டும் என்று பழக்கி வைத்துள்ளார் அந்த அப்பா.
குண்டுவீச்சின் கோரம்
இதனால்தான் வெடிகுண்டுச் சத்தம் கேட்டதும் அந்தக் குழந்தை சற்றும் பயப்படாமல் ஜாலியாக சிரிக்கிறது. அந்த மழலைக்கு வெடிகுண்டு வீச்சின் கோரம் கொஞ்சம் கூட தெரியக் கூடாது என்பதற்காக அப்துல்லா இப்படி பழக்கி வைத்துள்ளார். மகளுக்கு சிறு வேதனை கூட தெரியக் கூடாது, வலி கூட வரக் கூடாது என்று நினைக்கும் சராசரி அப்பாதான் என்று நாம் கடந்து போய் விட முடியவில்லை.
அப்துல்லா
பிள்ளைகளை பாதுகாப்பாக கூட வளர்க்க முடியாத ஒரு மோசமான சூழலில் வாழும் அப்துல்லா போன்ற எண்ணற்ற அப்பாக்கள் சிரியாவில் வேதனையில் செத்துக் கொண்டுள்ளனர். மனித வாழ்க்கையின் ஆகப் பெரிய சந்தோஷமே நிம்மதியான, அமைதியான வாழ்க்கைதான். அதற்குக் கூட உத்தரவாதம் இல்லாவிட்டால் அது என்ன நாடு அது என்ன அரசு.. ! இப்படிப்பட்ட சூழலையா நாம் பிஞ்சுக் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது.. மனிதர்களை விட மோசமான விலங்குகள் வேறு ஏதேனும் இருக்க முடியுமா!
|
வேதனை
இந்த வீடியோவைப் பார்க்கவே பெரும் வேதனையாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இதில் வந்து தங்களது கோபம், வேதனை, ஆதங்கத்தைக் காட்டி பதில் போட்டுக் கொண்டிருக்கின்றனர். என்ன ஒரு சோகமான உலகம் பாருங்கள்.!