தெற்கு சூடானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலி
ஜூபா: தெற்கு சூடானின் தலைநகர் ஜூபா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய நாட்டு தயாரிப்பான சரக்கு விமானம் ஒன்று தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் இருந்து புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால்,விமானத்தில் பயணித்தவர்களில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமானத்தில் 5 ரஷ்யர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் சென்றவர்கள் எத்தனை பேர், விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் 40 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில சமயங்களில் தெற்கு சூடானில் சரக்கு விமானங்களில் கூட பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.