கராச்சியில் ஓடும் பேருந்தில் தீவிரவாதிகள் காட்டுமிரண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு- 41 பயணிகள் பலி!!
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி அருகே பேருந்தில் பயணம் செய்தவர்கள் மீது ஆயும் தாங்கிய தீவிரவாத கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கராச்சி அருகே உள்ள அல் ஆஷார் கார்டன் காலனியைச் சேர்ந்த பேருந்தில் 60 பேர் பெட்ரல் பி ஏரியா பகுதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கராச்சியின் சஃபூரா சவுக் அருகே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் பேருந்தில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது.
இதில் மொத்தம் 41 பேர் பலியாகினர். இவர்களில் 25 பேர் ஆண்கள்.. 16 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 20 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பியுள்ளனர்.
அதே நேரத்தில் பேருந்துக்குள் உள்ளே நுழைந்து தீவிரவாத கும்பல் தீ வைத்ததாகவும் இதனாலேயே 41 பேர் கருகி உயிரிழந்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. தற்போது சம்பவ இடத்தை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.