13 வயது சிறுமியை கடத்தி இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்.. பாகிஸ்தானில் பரபரப்பு
கராச்சி: பாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்துவ சிறுமியை கடத்தி இஸ்லாமிற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக பெண்களை கடத்தி சென்று இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவர்களை கட்டாய திருமணம் செய்து கொள்வதாக நீண்ட காலங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் வசித்து வருபவர் அலி அசார் (44). இவர் 13 வயது கிறிஸ்துவ சிறுமியை கடத்திச் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டார்.
18 வயது நிரம்பியவர்
கடந்த 2007-ஆம் ஆண்டு பிறந்த இந்த சிறுமியின் பள்ளி ஆவண பதிவிலும், சர்ச்சில் உள்ள பதிவிலும் அந்த சிறுமியின் வயது 13 என இருந்தது. ஆனால் வயது உள்பட அனைத்து ஆவணங்களும் மாற்றப்பட்டுள்ளன. சிறுமி 18 வயது நிரம்பியவர் என்றும் மதமாற்றத்திற்கும் திருமணத்திற்கும் விருப்பம் தெரிவித்து உள்ளார் என்றும் காட்டப்பட்டு உள்ளது.
கடத்தப்பட்டவருடன் திருமணம்
சிறுமி காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே காவல் நிலையத்திற்கு சிறுமி இஸ்லாம் மதத்திற்கு மாறி, கடத்தப்பட்டவருடன் திருமணம் செய்து கொண்டார் என்ற கொடுமையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியா மதமாற்ற சான்றிதழ்
இதற்காக மதரசா ஜாமியா இஸ்லாமியாவில் மதமாற்ற சான்றிதழும் அர்ஜூ பாத்திமா என்ற புதிய பெயருடன் திருமணச் சான்றிதழும் கொண்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாய் ரீட்டாவை சிறுமி சந்திக்கவிடாமல் அலி அசார் தடுத்து விட்டார்.
மனித உரிமை அமைப்புகள்
எனினும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது அர்ஜூ ராஜா சுய முடிவு எடுப்பதற்கு போதிய வயதுடையவராக இருக்கிறார் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அந்த நாட்டில் சிறுபான்மையோராக இருக்கும் கிறிஸ்துவர்கள், இந்துக்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நடக்கும் அராஜகங்களை பற்றி மனித உரிமை அமைப்புகளோ, அல்லது அரசியல்வாதிகளோ பேச கூட முன்வரவில்லை.
இந்து சிறுமிகள்
அந்த நாட்டில் பிரதமர் இம்ரான் கான் இந்து சிறுமிகளின் கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாய, திருமணங்கள் ஆகியவை தடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் இது போன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன. கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானின் ஹசன் அப்துல் சிட்டில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவரான பிரீத்தம் சிங் மகள் புல்பால் கவுர் (17) திடீரென காணாமல் போனார். கடந்த 9 மாதங்களில் இதுபோன்று 55க்கும் மேற்பட்ட சீக்கிய இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளனர்.