அன்று வந்ததும் இதே நிலா.. நீல் இன்று நிலாவில் கால் வைத்த நாள்!
சென்னை: ஒவ்வொரு மனிதனுக்கும் சாதனை உணர்வைக் கொடுத்த நாள் இன்று. ஆம். இன்றுதான் நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் காலடி எடுத்து வைத்தார். முதல் மனிதக் காலடி நிலவில் பதிந்த நாள் இது.
அமெரி்க்காவின் அப்பல்லோ 11 விண்கலமானது இன்றுதான் நிலவில் தரையிறங்கி புதிய வரலாறு படைத்தது. முதல் மனிதக் காலடியை நீல் ஆம்ஸ்டிராங் எடுத்து வைக்க அவரைத் தொடர்ந்து காலெடுத்து வைத்தார் மைக்கால் ஆல்டிரின்.
உண்மையில் இந்த நிலவுப் பயணமானது ஒரு பொறாமைப் பயணமாகத்தான் அமைந்தது என்பது சுவாரஸ்யமான உண்மை. விண்வெளிக்கு முதல் மனிதனை அனுப்பி 1961ம் ஆண்டு வரலாறு படைத்தது சோவியத் யூனியன். இது அமெரிக்காவுக்கு செம எரிச்சலாக மாறிப் போனது. சோவியத் யூனியனை வீழ்த்த அது எடுத்த ஆயுதம்தான் நிலா.
நிலவுக்கு முதல் விண்கலத்தை அனுப்பி கூடவே தரையிலும் இறங்கி வரலாறு படைக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதன் விளைவுதான் அப்பல்லோ 11 சாதனைப் பயணம்.
நீல் ஆம்ஸ்டிராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆல்டிரின் ஆகியோர் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். நிலவில் போய் இறங்கியதும் முதலில் தரையிறங்கியவர் ஆம்ஸ்டிராங். இதனால் அவர் வரலாறாக மாறிப் போனார். 2வது மனிதராக நிலவில் காலெடுத்து வைத்தவர் ஆல்டிரின். காலின்ஸ் இறங்கவில்லை.
இந்த வரலாறு படைக்கப்பட்ட தினம் 1969ம் ஆண்டு ஜூலை 20 ஆகும். நிலவை மனிதன் தொட்டு 47 வருடங்களாகி விட்டது. அந்தப் பயணத்திற்குப் பிறகு 10 விண்வெளி வீரர்களை நாசா நிலவுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் யாரும் தரையிறங்கவில்லை.
அதை விடுங்க.. இந்த நிலவைப் பார்த்து வியந்து போய் கவிதை பாடி, கனவு கண்டு, பாட்டி வடை சுட்டுப் போடுவதைப் பற்றியெல்லாம் சிலாகித்து, கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால் நிலா என்றெல்லாம் பாட்டுப் பாடி, அதைப் பார்த்து குழந்தைக்குப் பாலூட்டி சந்தோஷிக்கிறோம் அல்லவா.. ஆனால் நிலவுக்குப் போய் விட்டு வந்த பிறகு ஆம்ஸ்டிராங்கும், ஆல்டிரினும் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?.. "குமட்டலுடன் கூடிய கெட்ட வாடைதான் நிலவு முழுவதும் வியாபித்துள்ளது"