டோக்கியோவை உலுக்கிய 5.0 ரிக்டர் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை.. உயிரிழப்பும் இல்லை
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வெகு அருகே மிதமான நிலநடுக்கம் பதிவானது. இதனால் டோக்கியோவைச் சுற்றிலும் உள்ள 14 பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேசமயம், டோக்கியோவிலும், பிற பகுதிகளிலும் நிலநடுக்கத்தை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
வட கிழக்கு டோக்கியோவுக்கு 40 கி.மீ தொலைவில் இபராகி பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது பசிபிக் கடலுக்கும், வட கிழக்கு டோக்கியோவுக்கும் எல்லைப் பகுதியாக உள்ள பிரதேசம் ஆகும்.
ஜப்பான் நேரப்படி பிற்பகல் 1.24 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. பூமிக்குக் கீழே 40 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புல்லட்ட ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல இபராகி பகுதியில் உள்ள டோகாய் நகரில் அணு உலை உள்ளது. அதற்கும் ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நிலத்தட்டுக்களின் மேல்தான் ஜப்பான் தீவு அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நிலநடுக்கம்தான். சிறியதும், பெரியதுமாக பல நிலநடுக்கங்களைப் பார்ப்பது ஜப்பான் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறி விட்டது குறிப்பிடத்தக்கது.