வடகொரியா அணு குண்டு சோதனை - 5.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்
சியோல்: வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை நடத்தப்பட்ட பகுதியில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா 5வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி இருப்பதாகவும், அதன் காரணமாக வடகொரியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா பியூங்கி என்னும் இடத்தில் 5வது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட போது அப்பகுதியில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.3ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக அவ்வப்போது வடகொரிய இதுபோன்ற பயங்கர ஆணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜி20 மாநாடு நடைபெற்ற போது வட கொரியா மூன்று பயங்கர ஏவுகணைகள் சோதனையை நடத்தியது.
வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்தை தென்கொரியா கூட்டி உள்ளது.
A 5.3 magnitude seismic event detected near North Korea's nuclear test site. It is suspected to be North Korea's 5th nuclear test
— ANI (@ANI_news) September 9, 2016
வடகொரியாவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதை அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சீன நில அதிர்வு ஆய்வு கழகங்கள் உறுதி செய்துள்ளன. வெடிகுண்டு வெடிக்கப்பட்டதன் காரணமாக இந்த நிலஅதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என சீன நிலநடுக்க ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.
வடகொரியா, ஜனவரி மாதத்தில் தனது 4வது அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக ஐ.நா.வின் கடும் கண்டனத்திற்கு ஆளானது. இருப்பினும் தொடர்ச்சியாக பல ஏவுகணை சோதனைகளையும் தற்போது அணுகுண்டு சோதனையையும் வடகொரியா நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.