வங்கதேச தேர்தலில் வன்முறை... 5 பேர் பலியான பரிதாபம்
டாக்கா: வங்கதேசத்தில் இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே வெடித்த மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 10.41 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர்.
அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் காலை முதல் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். மாலை 4 மணியோடு வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
டாக்கா சிட்டி கல்லூரியில் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று காலை முதல்நபராக வந்து வாக்களித்தார்.
தேர்தல் நடக்கும் முன்னே நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தடுக்க நாடு முழுவதும் ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 10 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோதல்
இந்நிலையில், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே சில இடங்களில் வன்முறையும் மோதலும் ஏற்பட்டது.
5 பேர் பலி
இந்த மோதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
யாருக்கு வெற்றி?
தேர்தல் கருத்துகணிப்பு முடிவில், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சியை ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்படுகிறது. தேர்தலில் பெரும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதால் கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், கலவரங்களை கட்டுப்படுத்த ராணுவம் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.