சாம்சங் துணைத் தலைவர் ஜே ஒய் லீக்கு 5 ஆண்டுகள் சிறை
சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே ஒய் லீக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சியோல் : லஞ்சம் கொடுத்து நிறுவனத்திற்கு சாதகமாக செயல்களை சாதிக்க நினைத்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே ஒய் லீக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரிய அதிபர் பார் கியான் ஹேவிடம் இருந்து சலுகைகளை பெற லஞ்சம் கொடுக்க முயன்றது, வெளிநாட்டில் உள்ள சொத்துகளை மறைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜே ஒய் லீ மீது சியோல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் 2015ஆம் ஆண்டு சாம்சங் குழுமத்தின் 2 நிறுவனங்களை ஒன்றிணைத்தபோது தேசிய நிதியத்தின் ஆதரவை தருவதற்கு பெருமளவு பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜே ஒய் லீ மீது குற்றம்சாட்டப்பட்டது.
தீர்ப்பு
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் லீயிடம் தொடர்ந்து 22 மணி நேரம் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
பங்குகள் வீழ்ச்சி
மின்னணு சாதன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஜே யோங் கைது செய்யப்பட்டதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டன. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் 1.05 சதவீதம் வீழ்ச்சி கண்டு வர்த்தகம் முடிந்தது.
அரசு வாதம்
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லீ ஜே யோங்கை கைது செய்யவதற்கு அனுமதி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக எம்.பி.க்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் சாம்சங் நிறுவனத்தின் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேல்முறையீடு
எனினும் இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடந்துள்ளதாகவும் இது குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் ஜே ஒய் லீ தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். லீயின் தந்தை லீ குன் ஹீயும் 2008ம் ஆண்டு லஞ்சப்புகார் மற்றும் வரி ஏற்ப்பு செய்த வழக்கில் சிக்கி ஆயரித்து 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடி
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் அதிபர் பார் கியான் ஹே, பதவியில் இருந்து அகற்றப்பட்டார். மே 9ம் தேதி நடந்த தேர்தலில் மூன் ஜே இன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் சாம்சங் நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் லீ ஜே யோங் ஏற்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.