நேபாள நில நடுக்கத்தால் 50,000 கர்ப்பிணிகள் பாதிப்பு: ஐ.நா
நியூயார்க்: நேபாள நிலநடுக்கத்தால் 50000 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நடவடிக்கைக்களுக்கான நிதியம் கவலை தெரிவித்துள்ளது.
நேபாள நில நடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியிருக்க கூடும் என அந்நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலா கருத்து வெளியிட்டுள்ள நிலையில் நிலநடுக்கத்தால் 50 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என செய்தி வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த இந்த நிதியத்தின் செயல் இயக்குனரான டாக்டர் பாபாடுண்டே ஓஸோட்டிமெஹின், இதைப் போன்ற பேரிடரின்போது ஏராளமான கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
50000 கர்ப்பிணிகள் பாதிப்பு
நேபாள நில நடுக்கத்தால் சுமார் 50 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். சுகாதாரமற்ற சூழ்நிலை மற்றும் பிறக்கும் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு
எனவே, கர்ப்பிணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, நேபாள அரசுக்கு ஒத்துழைப்பாக எங்கள் நிதியத்தின் சார்பில் தேவையான சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
காத்மண்டுவில் அஞ்சலி
இதனிடையே தலைநகர் காத்மாண்டுவில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுவர்த்தி ஏற்றப்பட்டது.
தெருக்களில் தஞ்சம்
ஐந்தாவது நாளாக குளிரில் நடுங்கியவாறே பொதுமக்கள் வீதிகளிலேயே தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அதிரும் தொடர் நிலநடுக்கத்தால் தினம் தினம் அச்சத்துடனேயே வாழ்நாளை கழித்து வருகின்றனர் நேபாளவாசிகள்.