நெடுஞ்சாலையில் அனாதையாக நின்ற லாரிக்குள் 50 சடலங்கள் ... ஆஸ்திரியாவில்!
வியன்னா: ஆஸ்திரியாவின் எல்லைப் பகுதியில் அனாதையாக நின்ற லாரிக்குள் 50 சடலங்கள் மீட்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவில் ஹங்கேரி நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில், கடந்த புதன்கிழமை பதப்படுத்தப்பட்ட கோழிகளை ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று அனாதையாக நிற்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், லாரியின் மூடிய கதவுகளை உடைத்தனர். அப்போது லாரியின் உள்ளே 50 சடலங்கள் கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் முயற்சியில் லாரியில் ஆட்களைக் கடத்தியிருக்க வேண்டும் என்றும், போலீசாருக்குப் பயந்து லாரியை பாதி வழியில் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கடத்தல்காரர்களைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ஆஸ்திரியாவின் வரலாற்றின் இருண்ட தினம். இந்த சோகம் எங்களை வெகு ஆழமாக பாதித்து விட்டது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜோஹானா மைக்ல்-லிய்ட்னெர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருபவர்களைப் பற்றி நடைபெற்று வரும் பல்கானஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இந்த பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் கூறியுள்ளார்.