5000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது.. தொடரும் சோதனையால் மலேசியாவில் பதற்றம்
மலேசியாவில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வெளிநாட்டைச் சேர்ந்த 5000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்குப் பதற்றம் நிலவுகிறது.
கோலாலம்பூர்: மலேசிய குடிவரவுத்துறை கடந்த ஜூலை 1 முதல் நடத்திய சோதனைகளில் 5,065 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் வேலைச் செய்வதற்கான முறையான ஆவணங்கள் இவர்களிடம் இல்லாமையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் முறையாகப் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது.
5000 பேர் கைது
அந்தக் கெடு கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு முடிந்ததையடுத்து, மலேசிய குடிவரவுத்துறை சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன்படி கைது செய்யப்பட்டுள்ள 5,065 தொழிலாளர்களில் 1,520 வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். 1,476 இந்தோனேசியர்கள், மியான்மரைச் சேர்ந்த 429 பேர், வியட்நாமைச் சேர்ந்த 285 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 206 பேர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 261 ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18000 பேரிடம் சோதனை
இவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காகப் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 108 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. "மொத்தம் 17,955 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணி ஆவணங்களற்ற 5,065 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் முஸ்தாபர் அலி தெரிவித்துள்ளார்.
ஆள் கடத்தல்
பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான, கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஊதியம் இன்றி துரத்தப்படும் அவலம்
லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு அமர்த்துபவர்கள் எந்தவித ஆவணங்களுமின்றி இவர்களைப் பணியில் வைத்துள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட அளிக்கப்படாமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்களும் நிகழ்கின்றன.
சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புதல்
32 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்டுள்ள மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதே 2 மில்லியன் அளவிலான பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் உள்ளதாக அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.