பயங்கர மோதல்.. பிரேசிலில் 52 கைதிகள் கொல்லப்பட்டனர்.. 16 பேரின் தலை துண்டானது
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் சிறைச்சாலைக்குள் நடந்த பயங்கர வன்முறையில், 52 கைதிகள் கொல்லப்பட்டனர்.
அட்மிரா பகுதியில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. இரு குழுக்களாக பிரிந்து கொண்ட கைதிகள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதோடு, சிறை வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தீ வைத்தனர்.
தடுக்கச் சென்ற சிறைத்துறை அதிகாரிகளையும் கைதிகள் சிறைபிடித்தனர். பல மணி நேரம் நீடித்த வன்முறையில் 52 கைதிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதில் 16 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகிலேயே அதிக சிறை கைதிகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவை அடுத்து பிரேசில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இங்குள்ள சிறைகளில் இரண்டு மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு ஜூனில் 7,26,712 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
2018ம் ஆண்டு இறுதியில் கூடுதலாக 1,15,000 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என மனித உரிமைகள் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
சிறைகளில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கைதிகளுக்கு இடையே வன்முறை மற்றும் கலவரங்கள் ஏற்படுவது, சிறைகளை தகர்த்து தப்பித்து செல்வது உள்ளிட்ட முயற்சிகள் அவ்வப்போது நடப்பதும் இங்கு வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.