மியான்மரிலிருந்து 55 தொழிலாளர்கள் கடத்தல்.. ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து தாய்லாந்தில் மீட்பு
மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் தாய்லாந்தில் மீட்கப்பட்டுள்ளனர்.
பாங்காக்: மியான்மரின் பகோ என்ற பகுதியிலிருந்து சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட 55 தொழிலாளர்கள் ஆட்கடத்தல்காரர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள சமுத் சகோன் என்ற பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தத் தொழிலாளர்களைத் தாய்லாந்து பாதுகாப்புப் படையின் உதவியுடன் எயிட் அலையன்ஸ் கமிட்டி என்ற அமைப்பு மீட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசியுள்ள அவ்வமைப்பின் பிரதிநிதி யே மின், "அத்தொழிலாளர்கள் பகோ பகுதியில் உள்ள தனாடிபின் மற்றும் நியாங்கிளிபின் டவுன்ஷிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆட்கடத்தல் புரோக்கர்கள் அவர்களுக்கு வேலைச் செய்வதற்கான உரிமங்களைத் தயார் செய்து தாய்லாந்திற்கு அனுப்பியுள்ளனர். ஹிட்கிஹி ஊடாக ஏழுநாள் எல்லை பாஸ் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். பின் மஹாசாய் என்ற பகுதியில் ஒரு மாதத்திற்கு மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் சிலர் ஆட்கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி வந்ததன் மூலமாகவே இத்தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை அறிந்து கொள்ள முடிந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தப்பி வந்த ஒரு தொழிலாளி, "தாய்லாந்தில் வேலை இருப்பதாகப் புரோக்கர்கள் சொன்னதை நம்பி 65,000 கியாட்ஸ் (3000 இந்திய ரூபாய்) கொடுத்தேன். தாய்லாந்திற்கு அழைத்து வரப்பட்டதும் மஹாசாய் என்ற பகுதியில் உள்ள கட்டடத்தில் எந்த வேலையுமின்றி ஒரு மாதத்திற்கு மேல் அடைத்து வைத்திருந்தனர்" எனக் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், தாய்லாந்து 2.6 மில்லியனுக்கு மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொண்டுள்ளது. இவர்களில் பெருமளவிலான தொழிலாளர்கள் தாய்லாந்தைச் சுற்றியுள்ள மியான்மர், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட வறுமை மிகுந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த 2.6 மில்லியன் எண்ணிக்கையில் சரிபாதி அளவிலானோர் சட்டவிரோதமாக வேலையில் அமர்த்தப்பட்டுள்ளத் தொழிலாளர்களாக இருக்கின்றனர்.
அண்மையில் தாய்லாந்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் விதிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பாகக் கடுமையான கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.